சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... உயிரிழப்பு தவிர்ப்பு
சிவகாசி: சிவகாசி அருகே முதலிப்பட்டியில் இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் அறைகள் வெடித்து சிதறின. உயிர்சேதம் ஏதுமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் மருந்து கலக்கும் இயந்திரம் மற்றும் ஒரு அறை தரைமட்டமானது. காலை நேரம் என்பதால் பணியாட்கள் யாரும் வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அடிக்கடி இங்கு வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இதே முதலிப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 50 பேர் பலியானார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளினால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழ்ந்தாலும் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.