நெல்லையில் பரபரப்பு.. அதிமுக எம்.பி., மேயர் கலந்துகொண்ட விழாவில் திடீர் தீ விபத்து
நெல்லை: நெல்லையில் அதிமுக எம்.பி., விஜிலா சத்தியானந்த் மற்றும் மேயர் புவனேஷ்வரி கலந்துகொண்ட விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சாமியான பந்தல், சேர்கள் எரிந்து நாசமானது.
நெல்லை அடித்த பேட்டை கோடீஸ்வரன் நகரில் இன்று மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி மற்றும் நெல்லை மேயர் புவனேஷ்வரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் பட்டாசு விழுந்து தீ பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பந்தலினுள் இருந்த பிளாஸ்டிக் சேர்களில் பற்றியது.
இதில் சாமியான பந்தல் மற்றும் 7 சேர்கள் தீயில் எரிந்து நாசமாகின. அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.