திருவள்ளூர்: தனியார் நிறுவன பார்சல் கிடங்கில் பயங்கர தீ: ரூ 50 லட்சம் பொருட்கள் நாசம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன பார்சல் கிடங்கில், நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோவர்த்தனகிரி பகுதியில் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இரு சக்கர வாகன உதிரி பாகங்கள், கால்நடை தீவனங்கள் உட்பட பல பொருட்கள் இந்த நிறுவனத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் டயர் தயாரிக்கும் மூலப்பொருளான கார்பன் இருந்த கிடங்கில் எதிர்பாராதவிதமாக நேற்று நள்ளிரவு தீப்பிடித்தது.
தகவல் அறிந்து ஆவடி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, மணலி உள்ளிட்ட இடங்களில் இருந்து விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, கிடங்கில் ஏற்பட்ட தீ சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த சுமார் 50 லட்சம் மதிப்பிளான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. நடந்த சம்பவம் விபத்தா அல்லது சதி செயலா என்பது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.