தூத்துக்குடியில் பரபரப்பு.. கல்லூரி பேருந்துகளில் திடீர் தீ... 3 பஸ்கள் தீயில் எரிந்து சாம்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் தூத்துக்குடி புறநகர் பகுதியி்ல் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல வசதியாக 3 பேருந்துகள் மட்டும் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் காலி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு வழக்கம் போல் அங்கு பேருந்துகளை டிரைவர்கள் நிறுத்தியிருந்தனர்.
இதனிடையே சிப்காட்டில் உள்ள பேருந்துகள் நிறுத்தியிருந்த இடத்தில் திடீரென தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு யாரும் இல்லாததால் கவனிக்கவில்லை. இதனிடையே அங்கு பரவிய தீ, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகளுக்கும் பரவியது.
இதனால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதைக்கண்ட சிப்காட் ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்தி்ற்கு தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி டவுண் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவன தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் லாரியுடன் வந்து போராடி 1 மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மூன்று பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு சதி வேலை காரணமா என தீவிர விசாரணை நடந்து வருகிறது.