நெல்லை அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து!
நெல்லை: நெல்லை அருகே திருவேங்கடத்தில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தில் பட்டாசு கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்து வருகிறது. தீபாவளி பட்டாசுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் கட்டு கட்டாக இந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிமருந்துகள் திடீரென தீபிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினரின் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. விபத்து எதனால் நடந்தது என்பது குறித்த காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் பணிகளும் , தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் கிடங்குகளில் அடிக்கி வைப்பதும் சோராக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் அடிக்கடி பட்டாசு வெடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.
நேற்று சிவகாசியில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் அச்சம் விலகுவதற்கு முன்பாகவே கோவையில் நடைபெற்ற பட்டாசு விபத்துக்கு ஒருவர் பலியாகியுள்ளார். அதே நேரத்தில் நெல்லையிலும் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக பட்டாசு தீ விபத்துகள் நடந்து வருவதால் தீபாவளி பண்டிகை கொண்டாடும் நேரத்தில் மக்களிடையே அச்சம் பரவி வருகிறது.