சென்னையில் ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ.. சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயம்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் ஏ.டி.எம். மையம் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 4 தீயணைப்பு வீரர்கள் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்தனர்.
சென்னை வியாசர்பாடி பாரதி நகர் பகுதியில் வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. நேற்றிரவு 11 மணி அளவில் அந்த ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏடிஎம் மையத்தின் அருகில் உள்ள கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஏடிஎம் மையத்தில் இருந்த கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு இருந்தது என்ற தகவல் தெரியவில்லை. தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.