சென்னை ஏசி குடோனில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஏசி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஏசி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீ அணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் மளமளவென பரவிய தீயால் தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அருகேயுள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்த தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரத்திற்கு பிறகு போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்து குறித்து வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து மின்கசிவால் ஏற்படதா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் அருகில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கோட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏசி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீயணைப்பு தடுப்பு கருவிகள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.