சென்னை: கோ ஆப்டெக்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து!
சென்னை: சென்னை எழும்பூரில், கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை கட்டிடத்தில் 4வது மாடியில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், கணக்கு பிரிவும் செயல்பட்டு வருகிறது.
துணிக்கடை செயல்பட்ட இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் இன்று நண்பகலில் 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் வசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. கடந்த மாதம் 26ஆம் தேதி இதே கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.