நடிகை ஹேமமாலினியின் சென்னை வீட்டில் தீ விபத்து.. பெட்ரூம் எரிந்து சாம்பலானது!
சென்னை: நடிகை ஹேமமாலினியில் சென்னை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. சம்பவத்தின் போது ஹேமமாலினி அந்த வீட்டில் இல்லாததால், அவர் உயிர் தப்பினார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் ‘எச்.எம்.எலிகன்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மூன்று மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நடிகையும், மதுரா தொகுதியின் எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் எதிர் வீட்டில் ஹேமமாலினியின் சகோதரர் சக்கரவர்த்தி வசித்து வருகிறார்.
சென்னைப் பயணங்களின் போது ஹேமமாலினி அந்த வீட்டில் தங்குவது வழக்கம். மற்ற சமயங்களில் அந்த வீடு பூட்டியே கிடக்கும்.
இந்நிலையில், நேற்று அந்த வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 3 தீயணைப்பு வண்டிகளில் மைலாப்பூர் தீயணைப்பு படையினர் 20 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிடத்தில் இருந்த மற்ற குடும்பங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், மூச்சு சுவாசக் கவசம் அணிந்தபடி, வீட்டில் சூழ்ந்திருந்த புகையை தீயணைப்புப் படை வீரர்கள் அகற்றினர். அப்போது படுக்கை அறையின் ஏ.சி. மெஷின் மற்றும் மின் வயர்கள் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும், ஏ.சி. மிஷினில் இருந்து பரவிய தீ அறையில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் மீது பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், "குறுகலான வழியாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தின் அருகே செல்வதிலும், அறை முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் உள்ளே நுழைந்து தீயை அணைப்பதும் சவாலாக இருந்தது. ஏ.சி. மிஷினில் ஏற்பட்ட மின்சார கசிவுதான் தீ விபத்திற்கு காரணம்" என்றனர்.
சம்பவத்தின் போது, ஹேமமாலினி சென்னை வீட்டில் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்கிருந்த மரச்சாமான்கள், துணிமணிகள் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமாகியது.
இந்த தீ விபத்து தொடர்பாக ஹேமமாலினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.