மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் தீ... சாரல் மழையால் அரிய மூலிகைகள் தப்பியது
நெல்லை: புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சாரல் மழை பெய்ததால் அரிய வகை மூலிகைகள் தீயில் இருந்து தப்பின.
நெல்லை மாவட்டம், புளியங்குடி வனச்சரகத்தில் கோட்டமலை பீட் பகுதியில் ஏராளமான தேக்கு, வேங்கை, சந்தனம் உள்ளிட்ட மர வகைகளும், அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன.
இந்த வனப்பகுதியில் நடமாடும் சட்டவிரோத கும்பல் தடை செய்யப்பட்ட மரங்களை வெட்டுதல், வனப்பகுதியில் தீ வைத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மரங்களையும், வைரம் இருப்பதாக கருதி பாறைகளையும் இந்த சட்டவிரோத கும்பல் கடத்தி வருகிறது. அவர்களை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை.
இந்நிலையில் இரவு வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 10 ஏக்கருக்கும் மேல் உள்ள சந்தனம், தேக்கு, கரிமசால் பட்டைகள் எரிந்து நாசமாகின. புளியங்குடி வனசரகத்திற்கு உள்பட்ட வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று விடிய விடிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினர். இதற்கிடையே நள்ளிரவில் சாரல் மழை பெய்ததால் தீ தானாக அணைந்தது. இதனால் வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.