எங்களை யாருமே கண்டுக்கலையே... வேதனையில் பட்டாசு தொழிலாளர்கள்- ஜன. 10ல் உண்ணாவிரதம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க கோரி வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
சிவகாசி: இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாசி முழுவதும் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், அனைத்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களித்து திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை முன்வைத்து, வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டமும், அதனை தொடர்ந்து தினமும் மனித சங்கிலி, அமைதி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்கள் மக்களை பாதிக்கும் என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்ளும் அரசும், மக்களும் அவர்களின் சந்தோஷத்திலும், திருவிழாக்களாலும், நல்லது, கெட்டதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பட்டாசு தொழிலாளர்களையும், உற்பத்தியாளர்களையும் கண்டுகொள்ளாதது வருத்தமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.