வெயிலில் வறுபடும் சென்னைவாசிகளுக்கு ஜில்லுன்னு ஏ.சி பஸ் ஸ்டாப்!
சென்னை: சென்னை வெயிலில் வறுபடும் மக்களுக்காக முதன் முறையாக குளுகுளு வசதியுடன் கூடிய ஏ.சி பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது... சென்னை சாலைகளில் கானல் நீரோடுகிறது... வீசும் அனல்காற்றுக்கு அஞ்சி வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர் மக்கள்.
வேறு வழியின்றி வெளியே போக நேரிட்டாலும் பேருந்து நிறுத்தங்களில் வியர்வை வழிய காத்திருக்க நேரிடுகிறது சென்னைவாசிகளுக்கு.
கோடை காலம் நெருங்கி வருகிறது. கோடை வெயிலை எப்படி சமாளிப்பது? என்று இப்போதே பொது மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.
சென்னையில் பேருந்து பயணிகளுக்காக ஏராளமான நிழற்குடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் கடுமையான கோடையில் அந்த இருக்கைகளும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தகிக்கிறது.
ஏ.சி பேருந்து நிறுத்தம்
எனவேதான் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் சிரமத்தை குறைக்கவும், சிறிதுநேரம் அவர்கள் ஏ.சி.யில் உட்கார்ந்துவிட்டு, பேருந்தை பிடிக்கவும் சென்னையில் முதல் முறையாக ஏ.சி.யுடன் கூடிய தங்கு மிடம் திறக்கப்பட்டுள்ளது. பரங்கிமலையில் உள்ள கிராண்ட் கமிஷன் டிரங்சாலை ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தில் இந்த குளுகுளு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி கொண்ட இந்த பயணிகள் தங்குமிடத்தில் 35 பேர் உட்காரலாம். 50 பேர் நின்று கொண்டிருக்கலாம். கழிவறை வசதியும் உண்டு.
கண்டோன்மெண்ட் போர்டு
இந்த தங்குமிடத்தில் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் மாநகர பேருந்துகள் வரும் நேரமும் சர்க்யூட் டி.வி. மூலம் தெரிவிக்கப்படும். செயின்ட் தாமஸ் மவுண்ட், பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு சார்பில் இந்த ஏ.சி. தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்டோன்மெண்ட் போர்டு ரூ.1.25 கோடி செலவிட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் மே 3ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னையில் ஏ.சி. தங்குமிடங்கள்
இந்த தங்குமிடம் மெட்ரோ ரெயில் வேலை நடைபெறும் இடத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்லாவரம், விமான நிலையம் பேருந்து நிறுத்தங்களிலும் இது போன்று பயணிகளுக்கான ஏ.சி. தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது.
தனியாருக்கு அழைப்பு
ஏ.சி. தங்குமிடம் தனியார் வடிவமைப்பாளர் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. தனியாரிடம் நிதி பெற்று இவை அமைக்கப்பட உள்ளன. வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களையும் அருகில் அமைக்க அழைப்பு விடப்படுகிறது.
கும்பகோணத்தில் ஏ.சி பஸ் ஸ்டாப்
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ஏ.சி பயணிகள் பேருந்து நிறுத்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.