டிடிவி தினகரன் எம்எல்ஏவிற்கு சட்டசபையில் முதல்நாள் - தனி ஒருவனாக சாதிப்பாரா?
டி.டி.வி தினகரன் நாளை கூட உள்ள சட்டசபையில் கலந்து கொள்ள உள்ளதால மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சென்னை : தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளது. இது டி.டி.வி தினகரனுக்கு முதல் சட்டசபை கூட்டம் என்பதால், அவரின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் நாளை நடைபெற உள்ளது. காலை பத்து மணிக்கு ஆரம்பிக்க உள்ள இந்த கூட்டத்தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கு பெற உள்ளனர். இதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையின் மூலம் தொடங்கி வைக்க இருக்கிறார்.
ஜனவரி 13ம் தேதி வரை நடக்கும் இந்த சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு சட்டசபை கூட உள்ள நிலையில் பரபரப்பு அதிகமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சமீபத்தில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மூலம் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் டி.டி.வி தினகரன் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இருப்பதன் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. அவரது ஆதரவாளர்களாக இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், தனி ஆளாக சட்டசபையில் பங்கேற்ற உள்ள அவரின் செயல்பாடு குறித்து அறிய மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
தினமும் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அதிரடி காட்டி வரும் டி.டி.வி தினகரன் சட்டமன்றத்திலும் அதே அதிரடியை காட்டுவாரா அல்லது தனியாக இருப்பதால் அவரை அதிமுக உறுப்பினர்கள் சீண்டிப்பார்ப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சியான திமுக இந்த முறை போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம், விவசாயிகள் பிரச்னை, கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை எழுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் கூடிய அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தினகரனை எப்படி கையாள வேண்டும், எப்படி சட்டசபையில் பேச வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.