சட்டசபையில் உருவப்படம் திறந்து வைக்கப்பட்ட முதல் பெண் தலைவர் ஜெயலலிதா!
பேரவையில் உருவப்படம் திறந்து வைக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் ஜெயலலிதா.
Recommended Video
சென்னை: பேரவையில் உருவப்படம் திறந்து வைக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெறுகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக பதவியேற்று மாணவ, மாணவிகள், விவசாயிகள், ஆதரவற்ற, ஏழை பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
தமிழக மக்களாலும், தொண்டர்களாலும் அம்மா என்ற அன்புடன் அழைக்கப்படுபவர். யாருக்கும் அஞ்சா நெஞ்சம் படைத்த பெண் முதல்வர் என்று எதிர்க்கட்சியினரும் பாராட்டும்வகையில் தனது கடமையை செவ்வனே செய்ததில் அவருக்கு நிகர் அவர்தான். பெண்கள் அரசியலில் நீண்ட காலம் இருக்க முடியாது என்ற நிலையை மாற்றி இறக்கும் போது முதல்வராகவே இறந்தவர்.
சட்டசபையில் படத்திறப்பு
இத்தகைய சிறப்புகளை பெற்ற ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் படம் வைக்க வேண்டும் என்பது அதிமுக மற்றும் நடுநிலையாளர்களின் பார்வையாகும். ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற முதல்வரின் படத்தை சட்டசபையில் திறந்து வைக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சியினரின் வாதமாகும். எனினும் அதையும் மீறி ஜெயலலிதாவின் படம் இன்று சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது.
இருக்கைக்கு நேர் எதிரில்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிரே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டுள்ளது. 7 அடி உயரம் , 5 அடி அங்குலத்தில் அவரது படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் தலைவர்கள் 10 பேரின் படங்கள் உள்ள நிலையில் தற்போது 11-ஆவதாக ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது.
எத்தனை படங்கள்
இதுவரை திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், அண்ணா, பெரியார், முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், எம்ஜிஆர், அம்பேத்கர் ஆகிய 10 பேரின் படங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 11-ஆவதாக ஜெயலலிதாவின் படம் திறக்கப்படுகிறது.
ஜெ. படம் திறப்பு
பேரவையில் முதல் பெண் தலைவராக ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவையே ஜெயலலிதா அடிக்கடி கூறும் வாசகம் ஆகும். படத்தின் கீழே மேற்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. கவின் கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன், ஜெயலலிதாவின் படத்தை வரைந்துள்ளார்.