தேமுதிக- மநகூ- த.மா.க. தொகுதிகளை உறுதி செய்வதில் இழுபறி: பட்டியல் எப்போது?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை அளவில் உறுதியாகியுள்ள நிலையில் தொகுதிகள் எவை எவை என்பதை கண்டறியும் பணிகளில் மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிகவும் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
ஒரு சில மாவட்டங்களில் ஒரே தொகுதிகளுக்கு தேமுதிகவும், மக்கள் நலக்கூட்டணியும் விருப்பம் தெரிவித்துள்ளதால் அவற்றை பகிர்ந்து கொள்வதில் குழப்பம் நீடிப்பதால் நேற்று நடைபெற்ற மாமண்டூர் மாநாட்டில் தொகுதிகளைப் பற்றியோ வேட்பாளர்களைப் பற்றியோ அறிவிக்க முடியவில்லை என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. கடந்த 23ம் தேதி ஏற்பட்ட உடன்படிக்கையில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மநகூ 110 தொகுதியிலும் போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் த.மா.கா. சேர்ந்ததையடுத்து தொகுதி பங்கீடு மறு சீரமைக்கப்பட்டது.
124 தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த தே.மு.தி.க. 20 தொகுதிகளை ஜி.கே.வாசனுக்கு விட்டு கொடுத்து 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுபோல மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 110 தொகுதியில் 6 தொகுதிகள் த.மா.கா.வுக்கு விட்டு கொடுக்கப்பட்டதையடுத்து 104 தொகுதிகளில் 4 கட்சிகளும் பிரித்து கொண்டன. த.மா.கா. 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. விற்கு 29 இடங்களும், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகளும் உடன்பாடு ஏற்பட்டுள்ளன.
மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் தொகுதிகள் மட்டும் பிரிக்கப்பட்டுள்ளன. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படுகிறது.
உத்தேச பட்டியல்
யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி உத்தேசமாக ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய பகுதிகளில் இடதுசாரிகளும், விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், அரியலூர் மாவட்டங்களில் விசிகவும் அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
தென் மாவட்டங்கள்
அதேபோல விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மதிமுகவும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
46 தனித்தொகுதிகள்
தமிழகத்தில் தனித்தொகுதிகள் 46 உள்ளதால் அவற்றை தேமுதிகவும் ம.ந.கூட்டணியும் சரி பாதியாக பிரித்துக் கொள்வது என்றும் வாய்மொழியாக பேசப்பட்டுள்ளது. அதன்படி, 23 தனித்தொகுதிகளில் ம.ந.கூட்டணிக்கு போட்டியிட வாய்ப்புள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
தென்காசி, பவானிசாகர், தாராபுரம், கீழ்வேளூர், அவிநாசி, வால்பாறை, திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட இடங்களில் போட்டியிட இடதுசாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
விசிக - மதிமுக
சீர்காழி, திட்டக்குடி, காட்டுமன்னார் கோவில், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவும், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் போன்ற இடங்களில் மதிமுகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
விஜயகாந்திடம் பட்டியல்
கடந்த மாதம் 28ம்தேதி வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய 4 பேரும், தே.மு.தி.க. அலுவலகம் சென்று விஜயகாந்தை சந்தித்து தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கொடுத்தனர்.
ஆலோசித்த விஜயகாந்த்
விஜயகாந்த், அந்த பட்டியலை ஆய்வு செய்த பின்னர் நீங்கள் கேட்கும் தொகுதிகளில், பெரும்பாலானவை தே.மு.தி.க போட்டியிட விரும்பும் தொகுதிகள். எனவே இந்த பட்டியலை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும், அதில் உள்ள 60 தொகுதிகளை உங்களுக்கு தருகிறேன். மீதமுள்ள 50 தொகுதிகளை நான் உங்களுக்கு ஒதுக்கி தருகிறேன் என்று கூறினாராம்.
திருமாவளவன்
இதனால் அன்றைய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. தேமுதிகவுடன் பேச்சு நடத்தி இறுதியாக ஒரு பட்டியல் வெளியிடப்படும் மக்கள் நலக்கூட்டணித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விசிக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் 12ம் தேதி வெளியாகும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை
மக்கள் நலக்கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 104 தொகுதிகள் பிரிக்கப்பட்டதில் விடுதலை சிறுத்தை 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதற்கான பேச்சுவார்த்தை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் இன்று நடைபெறுகிறது. அதனால் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதை 12ம்தேதி அறிவிப்போம் என்றார்.
17ல் வேட்பாளர் பட்டியல்
அதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்படும். 14ம்தேதி மனுக்கள் பெறப்படும். 25 தொகுதிகளுக்கும் மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்து 16 அல்லது 17ம்தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம்.
சுமூகத்தீர்வு ஏற்படும்
சென்னையில் திரு.வி.க. நகர், எழும்பூர் ஆகிய தனித் தொகுதிகளும், சோழிங்க நல்லூர் பொதுத் தொகுதி யும் கேட்டு இருக்கிறோம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 5 இடங்கள் விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்குமாறு கூட்டணியில் வலியுறுத்தி வருகிறோம். தொகுதிகள் பிரித்து கொள்வதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் சுமூகமாக பேசி தீர்வு காணப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தமாகா தொகுதிகள் எவை
இதனிடையே 26 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் தமாகாவிற்கு சாதகமான தொகுதிகள் எவை எவை என்று அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாராகியுள்ளது. 6 கட்சித்தலைவர்களும் கலந்து ஆலோசித்து இன்னும் சில தினங்களில் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் பிரச்சாரம்
நாளை முதல் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளதால் இன்று மாலைக்கும் தொகுதிகள் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அக்கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.