மதுக் கடைகளை மூடாமல் நிவாரண நிதி கொடுத்தால் சரிப்பட்டு வராது.. முதலில் கடைகளை மூட வேண்டும்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். அதிலும் ரொக்க உதவியையும் அவர் அறிவித்துள்ளார். ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடாமல் இந்த உதவியை தமிழக அரசு வழங்கினால் அந்த பண உதவி மீண்டும் அரசிடமே செல்லும் அவல நிலையே ஏற்படும்.
கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ளன.
சென்னையிலும் ஆற்று வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு நேற்று நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
குடிசைகைள இழந்தோருக்கு
இதில் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ. 10,000 நிவாரணம், நிரந்தர வீடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது.
ஆடு மாடு கோழிகளை இழந்தோருக்கு
அதேபோல ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை இழந்த குடும்பங்களுக்கும் ரொக்க நிவாரண உதவிகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
எமனாக நிற்கும் டாஸ்மாக்
ஆனால் இந்த ரொக்க நிவாரணத்தை கொடுப்பது குறித்து மக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே ஒரு கவலை எழுந்துள்ளது. குடிசைகளில் வசித்து வருவோர் பெரும்பாலும் அன்றாடம் உழைத்துச் சம்பாதிக்கும் ஏழை எளியவர்கள் ஆவர். இவர்களில் பலரும் டாஸ்மாக் கடைகளுக்கு ரெகுலராக போகும் பழக்கம் உடையவர்கள்.
மழைக்காலத்திலும் ஆறாக ஓடிய மது
சென்னையையும், பிற பகுதிகளையும் பெரும் வெள்ளம் புரட்டிப் போட்ட போதிலும் மதுக் கடைகளை மூடவில்லை அரசு. கடைகள் திறந்துதான் இருந்தன. மக்களும் மழையையும் பொருட்படுத்தாமல் குடிக்கத்தான் செய்தனர்.
கடைகளை மூடாவிட்டால்
இப்படிப்பட்ட நிலையில் இப்போது ரொக்க நிவாரணத்தை மக்களின் கையில் கொடுத்தால், குறிப்பாக குடிப்பழக்கம் உள்ள குடும்பத் தலைவர்களிடம் இது போனால் நிச்சயம் அது முழுவதும் அல்லது முக்கால்வாசிப் பணமும் மீண்டும் அரசிடமே செல்லும் - டாஸ்மாக் கடைகள் மூலமாக என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடைகளை மூடுங்கள்
எனவே முதலில் டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாவது மூட வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூட வேண்டும். அந்தக் காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் குடும்பத்துக்குப் போய்ச் சேரும் என்பது மக்களின் கருத்தாகும்.
பொங்கல் முதல் கடைகளை நிரந்தரமாக மூடுங்கள்
மேலும் வருகிற பொங்கள் நாள் முதலாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் அப்பாவி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எங்கே.. மழையிலும் விடாமல் வியாபாரம் பார்த்த அரசாச்சே இது.. அது எங்கே மூடப் போகிறது மதுக் கடைகளை!