அரசியல் அமைப்பு தொடங்கி 9 மாதங்களுக்கு பிறகு சென்னையை விட்டு வெளியே வந்த தீபா
அரசியல் அமைப்பு தொடங்கி 9 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக தீபா சென்னையை விட்டு வெளியே வந்துள்ளார்.
சென்னை: தீபா பேரவை என்னும் அமைப்பை தொடங்கி பிறகு எத்தனை பிரச்சினை நடந்தாலும் சென்னையை விட்டு வெளியே வராதவர் தற்போது வெளியே வந்து அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது சாயலில் உள்ள அவரது அண்ணன் மகள் தீபாவின் வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தொண்டர்களின் ஆதரவு பெருகி வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அதாவது ஜெயலலிதா பிறந்தநாளன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார்.
அமைப்புகள் ஆள்சேர்க்கும் பணி
ஜெயலலிதாவின் சாயலில் இருந்ததால் இவரது அமைப்புக்கு ஆள்கள் பலர் உறுப்பினராகினர். இந்த அமைப்பை தொடங்கியதன் நோக்கமே விரைவில் அதிமுகவை கைப்பற்றுவது என்று தீபா சூளுரைத்தார். இந்நிலையில் கணவன் மாதவனுடன் தீபாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாதவன் தனிக் கட்சி ஆரம்பித்தார்.
கட்சி பணிகளில் ஆர்வம் இல்லாத தீபா
இந்நிலையில் அமைப்புக்கு ஆள்களை சேர்க்க மும்முரம் காட்டிய தீபா விண்ணப்பப் படிவம் விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசியல் அமைப்பு தொடங்கி அதில் தீபா முழுமையாக செயல்படாததால் ஆங்காங்கே உருவாக்கப்பட்ட கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டன.
ஆர்.கே. நகர் தேர்தல்
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தீபா பிரசாரத்துக்கு சென்று மக்களை சந்திப்பதற்குள் அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகள், அதிமுக இணைப்பு, தினகரன் கைது, 18 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவு வாபஸ், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் டுவிட்டரிலேயோ அல்லது பேட்டியாகவோ தன் கருத்துகளை தெரிவித்து வந்தார்.
மனமிருந்தால்...
பொதுவாக தீபாவுக்கு தோன்றிதால் கருத்துகளை சொல்வதும், இல்லாவிட்டால் ஒதுங்கியே இருப்பதும் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அவரது அமைப்பை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறியதும் ஏதோ ஒரு காரணத்தினால் கைவிடப்பட்டது.
முதல் முறையாக...
அரசியல் அமைப்பு தொடங்கி 9 மாதங்கள் ஆகி முதல்முறையாக தீபா சென்னையை விட்டு வெளியே வந்திருக்கிறார். அதுவும் அரியலூரில் மாணவி அனிதா உயிரிழப்புக்கு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இனி தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா தீபா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.