சிலைகடத்தல் வழக்கு... முதல் முறையாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பஞ்சலோக சிலைகள் கடத்தல் வழக்கில் முதன்முறையாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பஞ்சலோக சிலை கடத்தல் வழக்குகளில் இதுவரை கடத்தல்காரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் முதன்முறையாக இதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஷ்வரர் கோவில் உட்பட இரண்டு கோவில்களிலிருந்து 6 பஞ்சலோக சிலைகள் கடத்தப்பட்டன. கடத்தப்பட்ட சிலைகள் சுமார் 1500 வருடங்கள் பழமையான சிலை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் அண்மையில் ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் சிலை கடத்தல் தடுப்பு ப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
பொன். மாணிக்கவேல் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தஞ்சாவூர் மாவட்ட கோவில்களில் இருந்து திருடப்பட்ட பஞ்சலோக சிலைகள் விவகாரத்தில் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடத்தப்பட்ட சிலைகள் பல கோடி மதிப்புள்ளவையாக கருதப்படும் நிலையில் அவை திருடுபோனது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கோ உள்ளூர் காவல்துறையிடமோ புகார் கொடுக்காததால் இந்த கடத்தலில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த பதிலில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.