சென்னையில் முதல்முறையாக சுரங்க ரயிலில் "ஜிகுஜிகு".. மக்களுக்கு திரில் அனுபவம்!
சென்னையில் முதல்முறையாக சுரங்க ரயிலில் மக்கள் பயணிக்கும் வாய்ப்பு இன்று முதல் கிடைத்துள்ளது.
சென்னை: சென்னை மக்கள் முதல்முறையாக 7.4 கி.மீ. தூரம் கொண்ட சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலில் பயணிக்க உள்ளனர்.
திருமங்கலம்- நேரு பூங்கா வரையிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை செல்லும் இந்த வழித்தடத்துடன் சேர்த்து மொத்தம் 7 ரயில் நிலையங்கள் வருகின்றன. அவை திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா உள்ளிட்டவை ஆகும்.
செல்போன் டவர் நோ
சுமார் 7.4 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 3 மாதங்களுக்கு செல்போன்கள் டவர் கிடைக்காது. இந்த கால இடைவெளிக்குள் செல்போன்கள் இயங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
40 ரூபாய்
இந்த சுரங்கப் பாதை ரயில் சேவைக்கான கட்டணம் சற்று ஜாஸ்திதான். திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை செல்வதற்கு கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக
சென்னையில் சுரங்கப் பாதை ரயில் பயண அனுபவம் புதிது என்பதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அத்துடன் வாகன நெரிசல் குறைய வாய்ப்பிருப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு அம்சங்கள்
சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் அவசர வழிகள் உள்ளன. அவசர காலத்தில் நடந்துசெல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் காற்றோட்டத்திற்கு 8 ராட்சத மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் சூரிய ஒளி வரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
8 இடங்களில் மெட்ரோ
நகங்களில் வாகன நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முதன்முதலாக 1984-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை தற்போது 8 நகரங்களில் செயல்படுகிறது. அதாவது கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், பெங்களூர், மும்பை, சென்னை, ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய நகரங்களாகும்.