தமிழகத்தில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாக 'தூத்துக்குடி கிரேஸ் பானு'
திருநங்கை கிரேஸ் பானு பொறியியல் பட்டப்படிப்பை முடித்து மாநிலத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாக சாதனை படைத்துள்ளார்.
சென்னை: மூன்றாம் பாலினத்தவராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் வெற்றி பெற்ற திருநங்கை கிரேஸ் பானு பொறியியல் பட்டப்படிப்பை முடித்து மாநிலத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாக சாதனை படைத்துள்ளார்.
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் அர்த்தநாரியாக பிறப்பவர்கள்தான் திருநங்கைகள். இவர்களை இந்த சமூகம் கேலியாக பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருநங்கையர்களை நாட்டின் மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து கடந்த 2014-இல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திருநங்கைகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதி மத்திய - மாநில அரசுகளின் கல்வி
மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநங்கையர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இடஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் திருநங்கைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகே தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு போராட்டம் நடத்தியபோது போலீஸார் அவர் மீது அடக்குமுறை நடத்தியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கிரேஸ் பானு, உயர்நிலைக் கல்வியை முடித்துவிட்டு கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. அரக்கோணத்தில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஇஇ
(எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் துறை) படிக்க கிரேஸ் பானுவுக்கு இடம் கிடைத்தது.
இலவச கல்வி அளிக்க முன்வந்தும் இதர செலவுகளுக்காக அவதியடைந்தபோது அவருக்கு திருநங்கைகளும், நண்பர்களும் ஆதரவு கரம் நீட்டினர். இந்நிலையில்,. தற்போது பொறியியல் பட்டத்தை பெற்று மாநிலத்தில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற பெருமையை பெற்றார்.
சாதனைக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவரது முகநூல்
பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த ரித்திகா யாஷினி சீருடை பணியாளர்கள் தேர்வு எழுதி முதல் திருநங்கை உதவி ஆய்வாளராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.