விருதுநகரில் கல்விக் கூடத்தை கலவர பூமியாக்கிய மாணவர்களின் மோதல்- சரமாரி கத்தி குத்து!
காரியாபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் கத்தி எடுத்து மிரட்டி சண்டையிட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சண்டையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை மாப்பாளையத்தைச் சேர்ந்த பொறியியல் முதலாமாண்டு மாணவர் திவான் முகமது என்பவருக்கும் அதே ஊரில் காசிமார் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் அப்துல்காதர் இப்ராஹிம்மிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இருவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் கடுமையான வாய்த்தகராறில் ஈடுபட்ட நிலையில் இன்று மீண்டும் இரண்டு பேரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த மோதலின் போது உடன் இருந்த திவான் முகமது, இப்ராஹிம்மின் நண்பர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து சண்டையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியதுடன் மோதல் குறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவியூர் காவல்துறையினர் மமாணவர்களை மருத்துவமனைய்ல சேர்த்தனர். மோதலுக்கு காரணமான திவான் முகமது லேசான காயத்துடனும், மற்ற மூவருக்கும் கை மணிக்கட்டில் பலத்த காயமும் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். இரண்டு பேருக்குமிடையேயான மோதலுக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.