“மீன்களை சாப்பிடாதீர்கள்”.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எண்ணூர் கடலில் கப்பல் மோதியதால் கொட்டியுள்ள எண்ணெய்யால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மீன்களை உண்ண பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், பிடித்து வரும் மீன்கள் விலை போகாமல் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கப்பல் மோதி கொட்டிய எண்ணெய் படலம் கடல் நடுவில் இருந்தால் நவீனகருவியின் துணை கொண்டு அகற்ற முடியும். ஆனால் எண்ணெய் படலம் கரையோரம் ஒதுங்கியுள்ளதால் நவீன கருவியை பயன்படுத்த முடியவில்லை.
இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் எண்ணெய் படலம் கிடையாது. அங்கு சென்றுதான் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அதனால் யாரும் மீன் சாப்பிட அச்சப்பட தேவையில்லை. எண்ணெய் கசிவால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை. மீன் சாப்பிடாதீர்கள் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ரூ.49 கோடியே 49 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளனர். ரூ.124 கோடி இழப்பீடு தருமாறு 3 மாவட்ட மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களுக்கு உரிய இழப்பிடு அரசு வழங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.