மணிக்கு 60 கி.மீ.வேகம் காற்று வீசும்.. தென்தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Recommended Video
சென்னை: 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் இன்று தென்தமிழக கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தணியும் வெயில்
தமிழகத்தின் முக்கிய அருவிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனினும் சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தியும் வருகிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.
கடலுக்கு செல்ல வேண்டாம்
இதையடுத்து, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தணிந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். என்றாலும், திருச்சி, தூத்துக்குடி போன்ற ஒரு சிலமாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலுக்கு செல்ல வேண்டாம்
அதாவது குறைந்தபட்சம் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் இந்த பலத்த காற்றானது வீசக்கூடும் என்றும், அதிகபட்சமாக 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையினால் பாதுகாப்பு கருதி, மீனவர்கள் யாரும் தென்தமிழக கடல் பகுதிக்கு இன்று முழுவதும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அறிவுறுத்தியும் உள்ளது.
கொந்தளிப்புடன் கடல்
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடற்பகுதியில் 3 முதல் 3.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் உயருவதுடன், கடலும் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதற்கேற்றார்போல் கடந்த இரு தினங்களாகவே காற்று பலமாக வீசிவருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.