தொடரும் கடல் சீற்றம்... வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல் தொடர்ந்து சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் தற்போது சூறை காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி, கடினவயல், தென்னடார் ஆகிய இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
கடல் சீற்றம் மற்றும் சூறை காற்று காரணமாக இன்று பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்கள் படகுகளை சூறை காற்றில் இருந்து பாதுகாக்க கரையில் கயிறு கட்டி வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அசைவ பிரியர்களின் தேவையை கருத்தில் கொண்டு ஒரு சில மீனவர்கள் தான் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு குறைந்த அளவு மீன்களே கிடைத்து வருகின்றன. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தற்போது தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் மேலும் தடைகள் வரும் என மீனவர்கள் கவலையில் உள்ளனர்.