எச்சரிக்கை.. தென் மேற்கு, மத்திய வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம்... பலத்த காற்று வீசும்
சென்னை: தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் தென் மேற்கு திசையில் மணிக்கு 40ல் இருந்து 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை எங்கேயும் மழை பதிவாகவில்லை.
இதனிடையே, சென்னையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் பிற்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகே சென்றது. அப்போது வழக்கத்திற்கு மாறாக சூறைக்காற்று வீசயதன் காரணமாக தரையிறங்க முடியாத விமானம் இருமுறை வட்டமிட்டு சுற்றிவந்தது.
அதன் பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். அங்கிருந்து வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.