நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்து திருச்செந்தூர் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
Recommended Video
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்தும், தூண்டில் பாலம் அமைத்து தர வலியுறுத்தியும் ஆலந்தலை மீனவர்கள் கடலுக்குள் இறங்கி திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன்குடி அனல் நிலைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1320 மெகாவாட் திறன் கொண்ட 10,000 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாலம்
இந்த அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக கல்லாமொழி அருகே கடலில் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ மீட்டர் வரை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கருப்பு கொடி
இந்தப் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆலந்தலை சேர்ந்த சுமார் 200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்ட 200 க்கும் மேற்பட்ட படகில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாலம் அமைக்க
மேலும் கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலக்கரி இறங்குதளம் பாலம் அமைவதால் ஆலந்தலை பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இறங்குதள பாலம், மற்றும் ஆலந்தலை பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித சங்கிலி
கிராம மீனவ மக்கள் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
170- க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் செல்லாது காலவரையற்ற போராட்டம்
நடத்தி வருகின்றனர். ஆண்கள் கடலுக்குள் இறங்கி போராட்டமும், பெண்கள் கரையில் மனித சங்கிலி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.