”மீனவர்களை விடுவி”- சென்னை இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு 9 மாவட்ட மீனவர்கள் போராட்டம்
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு 9 மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், மீன்பிடிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தையொட்டி தூதரகம் முன்பு இரும்பு தடுப்பு கம்பிகள் போடப்பட்டு இருந்தன. நூற்றுக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மீனவர்கள் தடுப்பு கம்பியை தள்ளிக் கொண்டு தூதரகத்தை முற்றுகையிட செல்ல முயன்றனர்.
இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது. போராட்டத்தில் திடீரென ஒரு பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார். அவரை உடனே போலீசார் தடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.