படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டது கடலோர காவல் படை !
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களின் படகு பழுதாகியதால் கரை திரும்ப முடியாமல் தத்தளித்து மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் 14 மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் அந்தோனி என்பவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை கரைக்கு கொண்டு வர மற்ற மீனவர்கள் முயன்ற போது துரதிஷ்டவசமாக படகு பழுதானது. அதன் பிறகு கடலோர காவல் மீட்பு படையின் 1093 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்த கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் ஜவகர் தலைமையில் சென்ற மீட்பு படையினர் நடுக் கடலுக்குள் தவித்த மீனவர்களை மீட்டதுடன் பழுதான படகை மற்றொரு படகில் கட்டி இழுத்து வந்து உடல் நல பாதிப்பால் அவதிப்பட்ட அந்தோனியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.