இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமநாதபுரம், ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால், எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை வைத்தும் மத்திய மாநில அரசுகள் பாராமுகமாகவே இருக்கின்றன.
இந்நிலையில், மீனவர்கள் மீதான கைதுகளும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்பவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறுவது வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது.
சமீபத்தில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் படகுகள் மற்றும் பிற மீன்பிடிச் சாதனங்களையும் பறிமுதல் செய்தது.
இதுகுறித்து இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்கிற கோரிக்கையோடு, ராமேஸ்வரம் ராமநாதபுரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.