கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் சாம்பலால் மீன்கள் விஷமாகிவிட்டது.. ஆய்வுக்குழு பகீர் அறிக்கை
கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் சாம்பல் கழிவுகளால் மீன்கள் நஞ்சாகிவிட்டது என ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் சாம்பல் கழிவுகளால் மீன்கள் நஞ்சாகிவிட்டது என ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
எண்ணுர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள், குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதாகவும், இந்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதால், வெளியேற்றப்படும் கழிவுகள் கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் கலப்பதாகவும் ரவிக்குமார் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால், நிலத்தடி நீர் மாசுப்படுவதாக கூறிய அவர் குழாய்களைச் சரி செய்யவும், ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.
4 பேர் கொண்ட ஆய்வுக்குழு
இதனை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் எண்ணூர் அனல்மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 4 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
60 மாதிரிகளை கொண்டு ஆய்வு
இந்த ஆய்வுக்குழு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றுக் கழிமுகத்தில் ஆய்வு செய்தது. சுமார் 60 மாதிரிகளை கொண்டு ஐரோப்பிய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
நஞ்சாக மாறிய மீன்கள்
இதற்கான ஆய்வு அறிக்கை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அப்பகுதியில் உள்ள மீன்கள், இறால்கள் மற்றும் சிப்பி ஆகியவை நஞ்சாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
கன உலோகங்கள் அதிகம்
அவற்றில் காட்மீயம், லெட் போன்ற கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அப்பகுதியில் உள்ள தோட்டங்களிலும் 4 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு நடத்தியது.
காய்களும் நஞ்சானது
அதில் அங்குள்ள விளையும் கத்தரிக்காய், முறுங்கைக்காய் போன்றவற்றிலும் காட்மீயம், லெட் போன்ற கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருப்பதும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சாம்பல் கழிவுளால் மீன்கள் மற்றும் அப்பகுதியில் விளையும் காய்கள் நஞ்சாக மாறியிருப்பதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.