சென்னை உட்பட 3 மாவட்ட மீனவர்களுக்கு சலுகை.. மீன்பிடி தடைக்காலம் 29ம் தேதியோடு முடிகிறது
வரும் 29ம் தேதியோடு மீன்பிடித்தடைக்காலம் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் முடிவடைகிறது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமலில் இருந்துவந்த மீன்பிடி தடைகாலம் வரும் 29ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலங்களில் மீன்கள் விலையேற்றம் தாறுமாறாக இருக்கும்.
இதன்படி, நாட்டின் கிழக்குக் கடலோர மாநிலங்களில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையும், மேற்குக் கடலோர மாநிலங்களில் ஜூன் 1 முதல், ஜூலை 31ம் தேதி வரையும் என மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் பின்பற்றப்படுகிறது.
நாட்கள் அதிகரிப்பு
இந்நிலையில், தமிழகத்தில் இந்த சுழற்சி முறை, 45 நாட்களுக்கு மட்டுமே தடை என்ற அளவில் பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டில் இருந்து, இதனை 61 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
விதி விலக்கு
தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வார்தா புயல், எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு விபத்து போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.
மூன்று மாவட்டங்கள்
இதனால், வரும் 29ம் தேதியுடன் இந்த 3 மாவட்ட மீனவர்களுக்கான தடையை முடித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பொருளாதார பாதிப்பில் உள்ளதால், இவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14தான்
அதேசமயம், மாநிலத்தில் மற்ற கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடை, ஜூன் 14ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.