நாகை மீனவர்கள் குஷி.. முடிகிறது மீன்பிடி தடைகாலம்.. இன்று நள்ளிரவு கடலுக்கு செல்ல ஆயத்தம்
தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு நள்ளிரவு செல்கிறார்கள்.
நாகை: நாகையில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று நள்ளிரவே மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த தடைக்காலமான 60 நாட்களுக்கு கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் அவர்கள் வேலையின்றி, வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும் அந்நாட்களில் தங்கள் படகுகளின் பழுது நீக்கல், மீன்பிடி வலைகளை தைப்பது, உலர்த்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பதால் மீன்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து காணப்பட்டது. இதில் மீன்பிரியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளதால் குஷியாகி உள்ளனர். அதற்காக மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் என அனைத்தையும் தங்களது படகுகளில் நிரப்பி வருகின்றனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதால், இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக கடலோர மீன் மார்கெட்டுகளில் மீன்கள் வந்து குவிய உள்ளதால் மீன் பிரியர்கள் உற்சாகமாகமாகி உள்ளனர். அதேபோல, தற்போது அதிக விலையில் விற்கப்பட்டு வரும் மீன்களின் விலையும் இனி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.