முடிந்தது மீன்பிடித் தடைகாலம்.... கடலுக்குச் சென்றனர் மீனவர்கள்- குறையும் மீன்கள் விலை
சென்னை: மீனவர்களுக்கான மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் 45 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர். இதனால் தமிழகத்தில் மீன்கள் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். இதனால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இது படிப்படியாக மீன்வளத்தை குறைக்கும் எனக் கருதி கடந்த 2000-ஆம் ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது.
கடந்த 16 ஆண்டுகளாக மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தடைகாலம் 61 நாட்களாக நீடிக்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் தடைபிடி காலம் 45 நாட்களா அல்லது 61 நாட்களா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், ஒடிஸா, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஆண்டுக்கு 61 நாள்கள் தடையை ஏற்றுள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கெனவே இருந்துவந்த 45 நாள் தடையே தொடரும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. நடப்பாண்டும் ஆண்டும் இதே நடைமுறை தொடர்கிறது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தத் தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் மீன்வரத்து குறைந்து விலையும் உயர்ந்தது. தற்போது தடை நீங்க உள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் மீன் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.