அடுத்த 45 நாளைக்கு வஞ்சிர மீனை நினைச்சுக் கூட பார்க்க முடியாது போலிருக்கே!
தூத்துக்குடி: ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடைக் காலம் தொடங்கியது. இதனால் மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க 45 நாள் தடை விதிக்கப்படும்.
இந்த ஆண்டு தடைக்காலம் நேற்று மாலை முதல் தொடங்கியது. இந்த தடை காலம் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும். தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அவை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடை காலத்தில் நேரடியாக 5 ஆயிரம் மீனவர்களும் மறைமுகமாக 15 மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். தடை காலத்தில் விசைப் படகு மீனவர்கள் தொழில் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி வருகிறது.
இந்த தொகை போதாது என்றும், தினமும் ரூபாய் 250 என தரவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மீன்பிடி தடை காலத்தை அரசு 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியானதால் தூத்துக்குடி மீனவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் கூறுகையில், தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்களின் இனப்பெருக்க காலமும் மாறியுள்ளதாக தெரிகிறது.
இதை முன்னிட்டு மீன்பிடி தடை காலம் தொடர்பாக ஆய்வு செய்து மறு பரீசிலனை செய்ய வேணடும் என்று கோரி வருகிறோம். தடை காலமே தேவையில்லை என்னும் போது 45 நாளில் இருந்து தடை காலத்தை 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என அவர் தெரிவத்தார். இதனால் மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசைவ பிரியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.