நள்ளிரவு முதல் தொடங்கியது மீன்பிடி தடைகாலம்: நிவாரண தொகையை உயர்த்திதர மீனவர்கள் கோரிக்கை
மீன்பிடிதடை கால நிவாரண தொகையை உயர்த்தி தரும்படி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: மீன்பிடி தடை காலத்தின் அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தங்களது நிவாரண தொகையை இந்த வருடமாவது அதிகப்படுத்தி தருமாறு மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்க கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலமானது, 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்த தடைகாலத்தில் விசைபடகுகளை பழுது பார்த்தல், பெயிண்ட் அடித்தல், மீன்பிடி வலைகள் பின்னுதல், சேதமடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள்
அதன்படி, இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல், 8,000-க்கும் மேற்பட்ட தங்களது விசைபடகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
வழக்கமாக, மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு உதவித்தொகையினை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நிவாரண தொகையான ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை மீனவக் குடும்பங்களுக்கு 82 கோடி ரூபாய் நிவாரண தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழங்குவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்திருந்தார்.
ஆனால் மீனவர்களோ, தடைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகையை இந்த வருடம் அதிகப்படுத்தி தரும்படியும், அதையும் உரிய காலத்தில் வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தங்களது குழந்தைகளின் பள்ளி செலவுக்கு பணம் இல்லாமல் பாதிக்கப்படுவதால், மீன்பிடி தடைகாலத்தினை ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அமல்படுத்திட மத்திய-மாநிலஅரசுகள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.