மீன்பிடி தடைகாலம் வருகிற ஏப்.14 நள்ளிரவு முதல் தொடங்குகிறது -மீன் விலை உயரும் அபாயம்
மீன்பிடிதடை காலம் தொடங்கவுள்ளதால் மீன்விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதி நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இதனால் மீன்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அரசு உத்தரவின் பேரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தாண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. தமிழக கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்படும்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்படும். சிறு படகுகள் மூலம் கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறும். இதனால் மீன்கள் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன் பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதடைந்துள்ள விசைப்படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.