தென் மேற்குப் பருவமழை எதிரொலி.. குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு
குற்றாலம்: கேரளாவிலும் தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றாலத்திலும் மழை கொட்டத் தொடங்கியுள்ளது. கேரள வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஐந்தருவியில் அபாயகரமான அளவில் நீர் கொட்டுவதால் அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் என்றும் சீசன் களை கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.