கரூர் டி.என்.பி.எல்.சிமென்ட் ஆலையில் தீ விபத்து - 5 பேர் படுகாயம்
கரூர்: தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள கரூர் டி.என்.பி.எல்.சிமென்ட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் சார்பில் சிமென்ட் தயாரிப்பு ஆலையும் செயல்படுகிறது.
நேற்று மாலை இந்த சிமென்ட் ஆலையின் பின்புறம் உள்ள கொதிகலன் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொதிக்கலனிலிருந்து வெளியான நீராவி பட்டு, அருண்குமார்(37), லோகநாதன்(25), கார்த்திக்(32), பாலமுருகன்(27), கிருஷ்ணசாமி(40), ஆகிய ஐந்து பேரும் காயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர், பாலமுருகன், கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.