முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: சென்னையில் 5 அதிமுகவினர் சுற்றி வளைப்பு?
சென்னை: வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மேலும் ஐந்து அதிமுகவினர் சென்னையில் கைதாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் போலீஸ் தரப்பில் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.
நெல்லையைச் சேர்ந்த வேளாண் உதவி செயற்பொறியாள் முத்துக்குமாரசாமி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலதிகாரிகள் மற்றும் அதிமுகவினரின் கடும் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்ததாக தகவல்கள் கூறின.
இதையடுத்து அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்தன. இதன் விளைவாக வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியை இழந்தார். கடைசியில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தலைமைப் பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைதாவார்கள் என்று பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் கைதிலிருந்து தப்ப பல அதிமுகவினர் சென்னைக்கு தப்பி வந்து பல்வேறு மட்டங்களில் கைதிலிருந்து தப்ப முட்டி மோதி வருகின்றனர். இந்தப் பின்னணியில் இன்று 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் இந்தத் தகவலை போலீஸார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கைதானவர்களில் அதிமுக ராஜ்யசபா எம்.பி ஒருவரின் மகனும் அடக்கம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.