பச்சமுத்து சொல்லிதான் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தோம்.... மேலும் 5 மாணவர்கள் புகார்
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து சொல்லிதான் மருத்துவ படிப்புக்காக வேந்தர் மூவீஸ் மதனிடம் பணம் கொடுத்ததாக மேலும் 5 மாணவர்கள் மோசடி புகார் தெரிவித்துள்ளனர்.
வேந்தர் மூவிஸ் மதனிடம் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்காக ரூ75 கோடி பணம் கொடுத்து ஏமாந்ததாக 112 மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சினிமா பைனான்சியர்கள் அடுத்தடுத்து பச்சமுத்துவுக்கு எதிராக புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் 5 மாணவர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்துள்ளனர். அதில் பச்சமுத்து வற்புறுத்தலின்படியே வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதனிடம் மருத்துவப் படிப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறியுள்ளனர்.\
இந்த வழக்குகளிலும் அடுத்தடுத்து பச்சமுத்து கைது செய்யப்படக் கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.