வேளாண் அதிகாரி தற்கொலை: அக்ரியைத் தொடர்ந்து மேலும் 5 அதிமுகவினருக்கு சிக்கல்?
சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்லையில் வேளாண் செயற்பொறியாளராக பணிபுரிந்த முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேளாண் துறையில் 7 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதில் நேர்மையாக செயல்பட்டதால் அந்த துறையில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர்கள் மற்றும் நெல்லையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களின் நெருக்கல்களே தற்கொலைக்கு காரணம் என்று புகார் எழுந்தது.
முத்துக்குமாரசாமி வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 10 பேரும் கைது செய்யப்பட உள்ளனர். வேளாண்துறையில் பணியாற்றும் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த அதிமுகவினர் 5 பேர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லையைவிட்டு அவர்கள் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.