தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி! லாபம் யாருக்கு?
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேல் உயிரிழந்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, தேர்தல் ரத்தான மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக விருப்ப மனு
வேட்புமனு தாக்கல் வரும் 26ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 2ம் தேதி மனு தாக்கல் முடிவடைகிறது. 3 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து திமுக விருப்பமனு பெற்று வருகிறது. விண்ணப்பித்தவர்களிடம் 21ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள்
அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜிக்கும், தஞ்சையில் எம்.ரெங்கசாமிக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் போட்டி யிடுகிறார்.
தேமுதிக தனி ஆவர்த்தனம்
திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில், தேமுதிகவும் இந்த 3 தொகுதியிலும் போட்டியிடும் என அறிவித்து உள்ளது. கடந்த முறை தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது. இப்போது மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக செயல்படுகிறது.
பாமகவும் களம் காண்கிறது
மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேநேரம், பாமக கோதாவில் குதித்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த 3 தொகுதிகளிலும் பாமகவுக்கு வாக்கு வங்கி செல்வாக்கு இல்லை என்பதால் இங்கு பாமக போட்டியிடுமா என்பது சந்தேகமாகவே இருந்து வந்த நிலையில், தைரியமாக கோதாவில் குதித்துள்ளது அக்கட்சி. தமாகாவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து விட்டார்.
பாஜகவும் குதிக்கிறது
அதேநேரம், பாஜக வேட்பாளர்களின் பட்டியல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மேலிடம் இறுதி செய்த பின்னர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே 3 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய 5 கட்சிகள் போட்டியிடும் நிலைதான் தற்போது காணப்படுகிறது. வாக்குகள் பிரிவது ஆளும் அதிமுகவுக்கே லாபமாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.