”பள்ளி”ப்பாளையத்தில் “பல்லி” விழுந்த சாம்பாரை சாப்பிட்டு ஐந்து பேருக்கு வாந்தி,மயக்கம்!
நாமக்கல்: நாமக்கல்லில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று இறந்தார்.
இந்த நிலையில் துக்கம் விசாரிப்பதற்காக சேலம், செவ்வாய் பேட்டை பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் 5 பேர் நேற்று இரவு சேலத்தில் இருந்து ஆவாரங்காட்டுக்கு சென்றனர்.
அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு இட்லிக்கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா, நிஷா, ராஜாமணி, உஷாராணி, மாதேஷ் ஆகிய 5 பேருக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனே அவர்களை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். தற்போது அவர்கள் குணமடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், இட்லி கடைக்கு சென்று விசாரித்த போது அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.