திருவள்ளூரில் ஒரே நாளில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள்: போலீஸார் தீவிர விசாரணை
திருவள்ளூரில் ஒரே நாளில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த புட்லூரில் புதிய இரு சக்கர வாகனம் மற்றும் இரண்டு வீடுகளில் கார் கண்ணாடிகளை உடைத்து ஆவணங்களையும், இரண்டு வீடுகளில் இரு சக்கர வாகனத்தின் சக்கரங்களையும் திருடிய கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லூரில் வளர்ந்து வரும் பகுதியாக இருப்பது ராமகிருஷ்ணா நகர் மற்றும் ஏவிஎம் நகர். இப்பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவர் நேற்று வழக்கம் போல் காரை வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார்.
இன்று காலை எழுந்து பார்த்த போது கார் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த கார் சம்மந்தமான ஆவணங்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் முன் பக்க சக்கரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அதே போல் சங்கர் என்பவர் வீட்டில் பின் சக்கரத்தை கழட்டிச் சென்றுள்ளனர். அதே போல் நகரின் அடுத்த தெருவில் உள்ள விஜயகுமார் என்பவர் வீட்டில் புகுந்த அந்த கும்பல் அவர் புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தை கேட்டை திறந்து திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் நகரை ஒட்டிய ஏவிஎம் நகரில் உள்ள அரசு என்பவர் வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்த வீடுகள் மற்றும் தெருக்களில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் புட்லூர் பகுதியை ஒட்டியுள்ள தொழுவூரில் உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதால் குடித்து விட்டு பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி சம்பவமும் நடைபெறுவதாகவும், காவல் துறையினர் இங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திருட்டு சம்மந்தமாக 5 பேரும் கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .