மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் பரபரப்பு.. அமைச்சர் உதயகுமார் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
Recommended Video
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாளை மதுரையில் நடக்கவுள்ள முதல்வரின் நிகழ்ச்சி தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை முடித்து அவர் கிளம்பும் வேளையில், அங்கு வந்த 5 பெண்கள் திடீரென, கையில் கொண்டுவந்திருந்த மண்ணென்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், அவர்களைத் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அப்பெண்களைத் தீக்குளிக்கும் முயற்சியில் இருந்து தடுத்தனர்.
இதுதொடர்பாக அந்த பெண்கள் பேசுகையில், தங்களின் மகன்களை போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்துவருவதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் இரண்டு பேரின் கால்களை உடைத்து போலீஸார் சித்ரவதை செய்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், 5 பேரில் 3 பேரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களை எங்கு வைத்து விசாரணை செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக, அமைச்சர் உதயகுமார் உறுதியளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.