துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது- 5 ஆண்டுக்கு முன்னர் சசி கோஷ்டியை ஜெ.வார்னிங் செய்தபோது!
சென்னை: இன்று அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா.. அடுத்ததாக முதல்வராகிறார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே டிசம்பர் 30-ல் தான் ஜெயலலிதாவால் "துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது' என பொதுக்குழுவில் எச்சரிக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவும் அவரது மன்னார்குடி கோஷ்டியும்.
2011-ம் ஆண்டு சசிகலா, அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து கட்டம் கட்டி தூக்கியடித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் டிசம்பர் 30-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியது இதுதான்:
அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர்.
இப்படியும் முடிவு
அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர்.
பழிவாங்குவோம்னு மிரட்டல்
தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம' என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள்.
துரோகிகளுக்கு மன்னிப்பே இல்லை
இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது.
இவ்வாறு ஜெயலலிதா எச்சரித்திருந்தார்.
முதல்வர் சசிகலா
ஆனால் நிகழ்வுகள் இப்போது தலைகீழாகிவிட்டது! முதல்வர் பதவியை நோக்கிய பயணத்தில் மும்முரமாக இருக்கிறார் சசிகலா!!
ஜெயலலிதா பேச்சு விவரம்
2011 பொதுக் குழுவில் ஜெயலலிதாவின் இதர பேச்சு விவரங்கள்:
அடுத்த பிரதமர் யார் என்பதை அதிமுதான் தீர்மானிக்கும்!- ஜெயலலிதா