கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும், இல்லை என்றால்...: கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என்னுடைய திருவாரூர் தொகுதியிலும், அதற்கு பக்கத்திலே உள்ள நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி தொகுதிகளிலும் பாசனம் பெறும் கடைமடை பகுதிகளுக்கு ஆறுகளின் மூலம் தண்ணீர் வரவே இல்லை. விவசாயிகளின் இந்த இன்னலைப்போக்கிட தமிழக அரசு உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், திருவாரூர் மாவட்டத்தில் கருகும் சம்பா பயிர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் விவசாயிகள் வாய்க்கால்களில் தரையோடு ஓடும் நீரை சிறிது சிறிதாக சேகரித்து குடும்பத்தினருடன் குடங்களில் பிடித்து வயல்களுக்கு ஊற்றிப்பயிரை காப்பாற்றிட பதற்றத்தோடு முயற்சி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மூன்று போகம் விளைந்த நிலங்கள், தற்போது ஒரு போக விளைச்சலுக்கு கூட வழியின்றி வறண்டு கிடக்கின்றன.
திமுக ஆட்சியின்போது கரும்பு அரவை பருவம் தொடங்குவதற்கு முன்பாக விவசாய பிரதிநிதிகள், சர்க்கரை ஆலை அதிபர்கள், தமிழக அரசின் அதிகாரிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பிறகே கரும்புக்கு விலை நிர்ணயம் செய்கின்ற பழக்கம் திமுக ஆட்சிக்காலத்தில் இருந்து வந்தது.
ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு உதவி செய்திடும் நோக்கத்தோடு, கடந்த இரண்டாண்டுக் காலமாக அதிமுக ஆட்சியில் கரும்பு விலையை நிர்ணயம் செய்ய முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த முன்வரவில்லை. மேலும் தற்போது சர்க்கரை லெவி முறையை மத்திய அரசு விலக்கிக் கொண்டதால், சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் லாபம் வந்தும் கூட கரும்புக்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்யத் தமிழக அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இனியாவது முத்தரப்பு கூட்டத்தை முறையாக நடத்துவதோடு, தமிழக கரும்பு விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவிற்கேற்ற விலை என்ற கணக்கில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டிச்சத்தத்தை கணக்கிலே சேர்த்துக்கொள்ளாமல் ரூ.3,500 வழங்க வேண்டுமென்றும், தற்போது நிலுவையிலே உள்ள அனைத்துக் கரும்பு விவசாயிகளுக்கான பணத்தையும் நவம்பர் 15-ந் தேதிக்குள் வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கோரிக்கையினை ஏற்காவிட்டால், 3-11-2013 அன்று தமிழக சர்க்கரை ஆலைகள் முன்பாக திமுக விவசாய அணியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தென்னை நலவாரியம் தற்போது இந்த ஆட்சியில் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் நலனை கருதி, அந்த வாரியத்தை மீண்டும் இயக்கிட அதிமுக அரசு முன்வருமா? என்று தெரியவில்லை.
திமுக ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீவளூரில் விவசாயக்கல்லூரி ஒன்று தொடங்கப்பட்ட போதிலும், அதனை தற்போது செயல்படவிடாமல் இந்த அரசு தடுத்துள்ளதையும் விலக்கிக்கொண்டு, விவசாயிகளின் பொதுநலன் கருதி தொடர்ந்து அந்த கல்லூரியை நல்லமுறையில் இயங்கிட செய்ய முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாசனநீர் மேலாண்மை பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. கடந்த 4-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல் செய்திருக்கிறார்கள். மேட்டூர் அணை ஆகஸ்டு 2-ந் தேதி திறக்கப்பட்டும் கூட, காவிரி டெல்டாவில் கடைமடை பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் போய்ச்சேரவில்லை.
இதனால், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கடைமடைப்பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற அடப்பாற்றிலிருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு முறை வைக்காமல் தண்ணீர் விடவேண்டுமென்றும் அந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்..