பிளாஷ் பேக் 2016: தங்க விற்பனையை தரைமட்டமாக்கிய செல்லாத நோட்டு அறிவிப்பு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு இந்தியாவை அதிரவைத்தது. ஏழை நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தங்க விற்பனை தரைமட்டதான கூறப்படுகிறது.
சென்னை : கறுப்பு பண புழக்கத்தை தடுப்பதற்காக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏழை, நடுத்தர மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற வங்கி வாசல்களில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். ஏடிஎம் வாசலில் கால்கடுக்க நின்றிருந்தும் பணம் கிடைப்பது குதிரை கொம்பானது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு கொடுத்து நகை வாங்கி குவித்தனர். அன்றிரவு விடிய விடிய வியாபாரம் நடந்தது. நள்ளிரவுக்கு பிறகு தங்கம் விலை அபாரமாக உயர்ந்தும் விற்பனை குறையவில்லை. பல கடைகளில் இருந்த நகை, தங்க கட்டிகள் முற்றிலுமாக விற்று தீர்ந்தன. 6 மணிநேரத்தில், 15 டன் தங்கம், தங்க நகைகள் விற்பனையானதாக கூறப்பட்டது.
அரசு கிடுக்கிப் பிடி
கருப்பு பணம் தங்க நகையாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதால், அன்று நடந்த விற்பனை மட்டுமின்றி, கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான நகை விற்பனை விவரங்களை வழங்குமாறும், நகை வாங்கியவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்த ஏதுவாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அதிரடி ரெய்டு
வருமான வரித் துறையினர் நாடு முழுவதும் உள்ள பெரிய நகைக் கடைகளில் திடீர் ரெய்டு நடத்தினர். மேலும், 600 நகைக்கடைக்காரர்களிடம் விற்பனை குறித்த விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இது போன்ற காரணங்களால் தங்கம் விற்பனை சரியத் தொடங்கியது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை பாதிக்கப்பட்டது.
நகைக்கடைகள் மூடல்
தங்கத்தின் தேவை மக்களிடையே குறைந்துள்ளதாலும், பணப்புழக்கம் இல்லாததால் விற்பனை மந்தமானதாலும், போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் நகை தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
90 சதவிகிதம் பாதிப்பு
வருமான வரித்துறையின் கிடுக்குப் பிடியால் தங்க விற்பனை படிப்படையாக குறைந்தது. தமிழகத்தில் 40 நாட்களில் தங்க நகைகள் விற்பனை 90 சதவீதம் வரை பாதிப்பு அடைந்துள்ளது. பணம் புழக்கம் இல்லாததால் தங்கத்தின் மீதான நாட்டம் பொதுமக்களிடையே குறைந்து விட்டது என்றே கூறப்படுகிறது. இந்த நிலைமை சீரடைய எப்படியும் 6 மாதங்கள் ஆகும் என்றே கூறப்படுகிறது.