2016 பிளாஷ் பேக்: சென்னையை வதம் செய்த வர்தா... மறக்க முடியுமா?
சென்னை: 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பெரு வெள்ள சேதத்தை யாராலும் மறக்க முடியாது. அதன் தாக்கம் 2016ம் ஆண்டில் 3 மாதங்கள் வரை நீடித்தது. அதற்கு நேர்மாறாக 2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை அமைந்தது.
அக்டோபர் இறுதியில் பருவமழை தொடங்கினாலும் நவம்பர் மாதம் மிக மோசமான மாதமாக அமைந்தது. 150 ஆண்டுகாலத்தில் மிக குறைவான பருவமழை பெய்தது. கடந்த ஆண்டு பெய்த பெருமழைக்கு நேர்மாறாக அமைந்தது. பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த பருவமழை டிசம்பர் மாதம் மாறியது. டிசம்பர் 4ம் தேதி நாடா புயல் உருவானது. இந்த நாடா புயல் நழுவியது. வட தமிழகம் தப்பியது. அப்பாடா தப்பித்தோம் என்று அசந்திருந்த நேரத்தில் மீண்டும் ஒரு புயல் நான் வந்துட்டேன் என்று வர்தா என்ற பெயரில் வந்தது.
வர்தா புயல் ஆந்திராவில் நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எச்சரித்தது வானிலை மையம். டிசம்பர் 11ம் தேதியன்று பிற்பகலில் வர்தா புயல் தமிழகத்தை குறிப்பாக சென்னையை தாக்கும் என்று எச்சரித்தது.
நள்ளிரவில் தொடங்கிய கனமழை
டிசம்பர் 11ம் தேதியன்று ஞாயிறு நள்ளிரவு பெருமழை தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்தது. அதிகாலையில் மழையோடு காற்றின் வேகமும் இணைந்து கொள்ள புயல் ருத்ரதாண்டவமாடியது. ஊழிக்காலத்தை நினைவு படுத்தியது காற்றின் வேகம்.
192 கி.மீ வேகத்தில் வீசிய காற்று
டிசம்பர் 12ம் தேதி பிற்பகலில் வர்தா சென்னையில் தனது சதிராட்டத்தை தொடங்கியது. மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடல் அலைகள் எழுந்து அச்சத்தை அதிகரித்தது. 100 கிமீ வேகத்தில் வீசத் தொடங்கிய காற்று 192 கிமீ வேகமாக அதிகரித்தது.
சின்னாபின்னமான மரங்கள்
மயிலாப்பூர் தொடங்கி, மந்தைவெளி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர் வளர்ந்திருந்த மரங்கள், பூங்காக்களில் வளர்ந்து நிழல் கொடுத்த மரங்கள் எல்லாம் சிதைந்து சின்னாபின்னமானது. போரூர், திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு வரை பாதிப்பு நீண்டது.
உயிர் விட்ட மின்கம்பங்கள்
காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரம் இன்றியும், மழை மேக இருட்டினாலும் சென்னை மாநகரமும், புறநகர் பகுதியும் பகலியே இருள் சூழ்ந்தது. 10000 மின்கம்பங்கள், 500க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின.
காடாக மாறிய சாலைகள்
வர்தா வதம் முடிந்த மறுநாள் டிசம்பர் 13ம் தேதி மழை நின்று போனது என்னவோ உண்மைதான். ஆனால் வர்தா ஏற்படுத்தி விட்டு போன காயத்தின் வடு மாறாததாக மாறிவிட்டது. சாலைகள் எங்கும் மரங்கள் சாய்ந்து கிடந்தன. காலையில் நடந்து செல்லும் போது சிலு சிலு காற்று வீசி வரவேற்ற மரங்கள் எல்லாம் வேறோடு சாய்ந்து போனது கண்டு அவற்றை பார்த்து பழகியவர்களின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
புதர்மண்டிய பூங்காக்கள்
நவம்பர் மாதம் ஏமாற்றிய மழை டிசம்பரில் ஒரே நாளில் 38 செ.மீ பெய்து ஈடு செய்தது. ஆனாலும் வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பு சரியாக பல நாட்கள் ஆனது
சென்னை நகரில் கடற்கரைக்கு அடுத்த படியாக ஒரே பொழுது போக்கு பூங்காக்கள்தான். ஓங்கி உயர்ந்திருந்த மரங்கள் எல்லாம் ஒரே நாளில் தரைமட்டமானது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் எல்லாம் புதர்மண்டிப் போயின.
அடியோடி முடங்கிய தொழில்கள்
மின்விநியோகம் தடை பட்டதால் கிண்டி 900 சிறு தொழில் நிறுவனங்களும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1500 சிறு மற்றும் குறு தொழில்கள் அடியோடி முடங்கின. தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணமானார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்பற்று போனவர்கள்
செல்போன் கோபுரங்கள் பிடிங்கி எறியப்பட்டதில் 4 நாட்களாக யாரும் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. சாப்பிடாமல் கூட காலம் தள்ளிவிடும் மக்கள் ஊரில் உள்ள உறவினர்களுடன் பேச முடியாமல் போனதுதான் சோகம்.
குப்பை நகரமான சென்னை
முறிந்து போன மரங்கள் குப்பையாக குவிந்தது ஒரு பக்கம் இருக்க வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகளால் ஆங்காங்கே குவியல் குவியலாக குட்டி குட்டி மலைகாளாக மாறி நாறிப் போனது சிங்காரச் சென்னை. இந்த குப்பைகளில் இருந்து எழும் துர்நாற்றம் ஒருபக்கம் இருக்க கொசுக்கள் படையெடுத்து மக்களை துன்புறுத்தி விரட்டியது.
வெளியூர் பயணம்
சென்னையிலும், புறநகரிலும் 4 நாட்களாளுக்கும் மேலாக மின் விநியோகம் தடைபடவே, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டு ஒருவித மயான அமைதி நிலவியது. சென்னையில் நிலைமை சீராகும் வரை சொந்த ஊருக்கு சென்று வருவோம் என்று கிளம்பினர் சென்னைவாசிகள். சுனாமி, வெள்ளம் என பார்த்து பழகிய சென்னைவாசிகள் வர்தா செய்த வதத்தையும் எளிதில் கடந்து விடுவார்கள். ஆனால் வர்தா ஏற்படுத்திய வடு மறைய நீண்ட நா்ள்
ஆகும் என்பது உண்மைதான்.