எம்.ஜி.ஆரும் சிகிச்சையில் இருந்தபோது வேட்புமனுவில் ‘கைரேகை’ தான் வைத்துள்ளார்!
அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் முதல்வர் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 1984ம் ஆண்டு தேர்தலின்போது எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இரு
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களுக்கான வேட்புமனுவில் கைரேகை பதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஏற்கனவே 1984ம் ஆண்டு தேர்தலின்போது எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபடி வேட்புமனுவில் இடது கை பெருவிரல் ரேகையையே பதித்துள்ளார் என்பது தற்போது முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கடந்தவாரம் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், கட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவம் ஏ, வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவம் பி ஆகியவற்றில் கட்சித் தலைவர் கையொப்பம் இடும் இடத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
[Read This: ஜெ. நன்றாக இருக்கிறார்... பேனாவை பிடித்து கையெழுத்திட மட்டும் முடியவில்லை ]
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் ஜெயலலிதா. ஒரு மாத காலமாகியும் இன்னும் அவரது உடல்நிலை கையெழுத்து போடும் அளவிற்குக் கூட முன்னேறவில்லையா என கேள்வி எழுந்தது.
ஆனால், கைகள் வழியாக மருந்து செலுத்தப்பட்டதால் பேனா பிடித்து எழுத முடியாத நிலையில் முதல்வர் இருப்பதாகவும், ஆனபோதும் அவரது சுயநினைவுடனேயே கைரேகை பெறப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பெற்ற வேட்புமனுக்களை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு வேட்புமனுவில் முதல்வரின் கைரேகை பெறுவது இது முதன்முறையல்ல என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் கடந்த 1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்தார். எனவே, அவர் போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதிக்கான வேட்புமனுவில் கையெழுத்திற்குப் பதில் அவர் கைரேகையே பதிவு செய்துள்ளார். இந்த வேட்புமனுவை அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டே தான் அமெரிக்கா சென்று பெற்று வந்து, நெடுஞ் செழியன் மற்றும் ஆர்.எம்.வீரப்ப னிடம் அளித்துள்ளார்.
அந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து அத்தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வர் ஆனார்.
அப்போது இந்தப் பிரச்சினை பூதாகரமாக எழவில்லை என்றும், ஆனால் தற்போது அது பெரிது படுத்தப்பட்டுள்ளது என்றும் பேட்டி ஒன்றில் ஹண்டே தெரிவித்துள்ளார்.